சென்னை சென்னை அசோக் நகரில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் கழிவுகளை சேகரிக்க 5 வகையில் பயோ பைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 300 டன் மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய நான்கு காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஊரடங்கு, அதிகளவில் பரிசோதனை செய்து, காய்ச்சல் முகாம் நடத்தியது உள்ளிட்ட நடவடிக்கையின் மூலம் தொற்று உறுதியானவர்களை விரைந்து கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 80 சதவீதம் மக்கள் முககவசம் அணிகின்றனர். சென்னையில் உள்ள 89 சந்தைகளும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும். வங்கிகளில் தேவையற்ற சேவைகளை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் மாஸ்க், கையுறை இல்லாமல் வந்தால் ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும். இறந்த தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.