சென்னை: தபால் மற்றும் மணியார்டர்களை விரைவாக பட்டுவாடா செய்ய ஏதுவாக பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீடு எண் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தெற்கு வட்டார அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பு: விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீடு எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணா நகர் 1வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவென்யூ, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் - 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13ம் தேதியில் இருந்து மடிப்பாக்கம் 600 091 அஞ்சலகம் செய்ய உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இனி 600 091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.