சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மனைவி, மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அமைச்சரின் கார் ஓட்டுநர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். நேற்று காலை கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் தங்கமணியின் மனைவி, மருமகள் மற்றும் கார் ஓட்டுநர் என அனைவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அமைச்சர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் தங்கமணி, தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு நாட்களில் கட்சி சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதன்மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.