×

மார்க்கெட்டில் மீன் விற்பனையை கண்காணிப்பதற்கு தனி குழு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியுடன் கூடிய மீன்கடைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் அறிவித்துள்ள தளர்வுகளில் மீன் மார்க்கெட்டுகள் இயங்கலாம். தளர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன் புரத சத்து மிகுந்த உணவு. மக்களுக்கு அது எளிதாக கிடைக்க வேண்டும். மீன் விற்பனை தொடங்குவது குறித்து மீனவர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கோரிக்கைகள் கேட்கப்பட்டது.

மீன் விற்பனையின் போது சமூக இடைவெளியை கடைபிடித்து, சானிடைசர், முகக்கவசம் பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மீன் விற்பனையை கண்காணிக்க மாநகராட்சி உதவி பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மார்க்கெட்டிற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொரு மார்க்கெட்டின் நுழைவாயிலிலும் சானிடைசர் வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்க கூடாது. கடைகளில் வியாபாரம் செய்பவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த உறுதிமொழிகளை ஏற்று கடைபிடிப்பதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : committee ,Minister Jayakumar ,fish market , In Marketing, Fish Sales, Monitoring, Separate Committee, Interview with Minister Jayakumar
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...