திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே முழு ஊரடங்கிலும் எந்தவொரு சமூசாக விலைகளும் இல்லாமல் லோடு வாகனத்தில் கூட்டம் கூட்டமாக தொழிலாளிகளை ஏற்றி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேப்பம்பட்டு காவல் சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வந்தது. அப்போது அவ்வழியாக உரிய அனுமதியின்றி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சமூக இடைவெளியன்றி 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றி வந்த லோடு வேன் ஒன்றை காவல்துறையினர் மடக்கி .பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வேனில் வந்த அனைவரும் திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணிக்காக அழைத்து வந்தவர்கள் என தெரியவந்தது. முழு ஊரடங்கிலும் நகராட்சி பணிக்காக எந்தவொரு சமூக விலகலும் இல்லாமல் லோடு வாகனத்தில் கூட்டம் கூட்டமாக தொழிலாளிகளை ஏற்றி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.