புதுடெல்லி: ‘உலகம் அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது. இவற்றுக்கான தீர்வுகள் புத்தரின் கொள்கைகளில் இருந்து வரக்கூடும்’ என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் தர்மச்சக்கர தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: புத்தர் நம்பிக்கை மற்றும் நோக்கத்தை பரிந்துரைத்தார். அவை மனித துன்பங்களை நீக்குவதாகும். சந்தர்ப்பங்களை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதற்கு முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
நம்பிக்கை, புதுமை மற்றும் இரக்கம் ஆகியவை துன்பத்தை எவ்வாறு அகற்றும் என்பதற்கு இந்தியாவின் தொழில்முனைவோர் துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிரகாசமான இளம் மனங்கள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளது. புத்தரின் கொள்கைகள் பல சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு நல் வழியை காட்டுகின்றன. புத்தரின் போதனைகள் சிந்தனை மற்றும் செயலில் எளிமையை கொண்டுள்ளன.
இன்று உலகமே அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைகளில் இருந்து தீர்வுகள் கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் அவரது கொள்கைகள் பொருந்தும். 21ம் நூற்றாண்டின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது இளம் நண்பர்கள் மூலமாக இந்த நம்பிக்கை எனக்கு வந்தது. நமது இளைஞர்கள் புத்தரின் கொள்கைகளோடு இணைந்திருக்க வேண்டும் என்று எனது இளம் நண்பர்களை வலியுறுத்துவார்கள். அவர்கள் முன்னேற்றத்துக்கான வழியை ஊக்குவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.