சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் புதிதாக இரண்டடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி 6ம் கட்ட அகழாய்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து, கீழடியில் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் அகழாய்வில் கருஞ்சிவப்பு மர பானைகள், பெரிய அளவிலான விலங்கின் எலும்புகள், இணைப்புக்குழாயாக பயன்படுத்திய இணைப்பு பானைகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற் கட்டுமானத்தின் தொடர்ச்சி தற்போது வெளிப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 3 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட செங்கற் கட்டுமானத்தின் கீழே புதிய இரண்டடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே அளவிலான செங்கற்களை கொண்டு இந்த கட்டிடத்தை கட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கற்களை இணைப்பதற்கு வெண்மை நிற மண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய செங்கற் கட்டுமானத்தின் தொடர்ச்சி இன்னும் நீண்டுக்கொன்டே இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.