×

கொரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்க லேப் டெக்னீஷியன்கள் தகுதியானவர்களே... உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை: கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும் பணி லேப் டெக்னீஷியன்களின் அன்றாடப் பணிதான் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க, கண் மூக்கு தொண்டை நிபுணர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும், லேப் டெக்னீஷியன்களை நிர்ப்பந்திக்க கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு சார்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்ப்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி. அதற்கான அடிப்படை தகுதி அவர்களுக்கு உள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மாதிரிகள் சேகரிக்க மறுப்பதன் மூலம், லேப் டெக்னீஷியன்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தவறிவருகிறார்கள். லேப் டெக்னீஷியன்கள் படிப்பில் மனித உடற்கூறுயியல் பாடப்பிரிவு உள்ளது. அவர்கள் அந்த பாடப்பிரிவை கற்றுள்ளனர்.

கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் மட்டுமே மாதிரிகளை சேகரிக்க பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறவில்லை. தற்போது பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளிவைத்தனர். கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்ப்பந்திப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாட பணி.

Tags : Lab technicians ,corona test ,examination ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்