திருவனந்தபுரம்: கேரள சைபர் கிரைம் போலீசார் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்களை கண்காணித்து, அவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர். இதையடுத்து கடந்த 27ம் தேதி கேரளா முழுவதும் 117 இடங்களில் ஒரேநேரத்தில் சோதனை நடத்தினர். இதில் அரசு டாக்டர், இன்ஜினியர் உட்பட 47 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து கேரள சைபர் குற்றப்பிரிவு தலைமை அதிகாரி ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் கூறியது: கேரளாவில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பகிர்பவர்கள், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ‘ஆபரேஷன் பி-ஹண்ட்’ என்ற பெயரில் ரகசிய கண்காணிப்பு நடந்து வந்தது. இந்தியாவிலேயே கேரளாவில் மட்டும்தான் இதுதொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடுகளில் கூட சிறுவர், சிறுமியர் பாதுகாப்பாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. வீடுகளில் நிர்வாணமாக இருக்கும் சிறுவர், சிறுமியரின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆபாச இணைய தளங்களில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்ய சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ‘டார்க் நைட்’ என்ற இணையதளம் வழியாகத்தான் பெரும்பாலும் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆபாச இணையதளங்களில் உள்ள சிறுவர், சிறுமியரை கண்டறிந்தால், இந்த கும்பல் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும். ஆபாச இணைய தளங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். கேரளாவில் இந்த செயலில் ஈடுபட்டு வரும் மேலும் பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.