×

கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் தடுப்பூசி: பாரத் பயோடெக் அறிவிப்பு; முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி:  ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முன்னதாக ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் இந்த பரிசோதனை வேலூர் உட்பட பல நகரங்களில் தொடங்க உள்ளது.

கட்டம் I மற்றும் II என்ற முறையில் மனிதர்களுக்கு செலுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா எம்.எலா கூறுகையில், ‘கோவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசியான ‘கோவாக்சின்’-ஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த தடுப்பூசி கண்டறிவதில் ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி ஆகியவற்றின் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகித்தது’ என்றார். பாரத் பயோடெக் தவிர, குறைந்தது ஐந்து இந்திய நிறுவனங்கள் கொடிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறிவதில் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும் ‘கோவாக்சின்’ தடுப்பூசி தவிர, பாரத் பயோடெக் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான ப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்க உள்ளது. புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்காக பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்துடன் பிரத்யேக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bharat Biotech ,Kovacs ,India ,Discovery , Corona, Control, Kovacs Vaccine, Bharat Biotech, Announcement, India Discovery
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!