×

மதுவுக்கு அடிமையான மகனை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை: புதுகை அருகே பரபரப்பு

திருமயம்: புதுக்கோட்டை அருகே  போதையில் வந்து தகராறு  செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் அருகே  மேல்நிலைப்பட்டியை சேர்ந்தவர்  பாலசந்திரன் (54).  சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன்  அருண்பாண்டியன்(26). டிரைவர். கொரோனா ஊரடங்கு காரணமாக  வேலையிழந்த  பாலசந்திரன் கடந்த 3 மாதத்துக்கு முன் சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.  

அருண்பாண்டியன் குடிக்கு அடிமையானவர். வேலைக்கு சென்றுவிட்டு தினமும்  வரும்போது பணத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம்.
இதை  பெற்றோர் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்த அருண்பாண்டியனின்  தாய் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  வீட்டில் தந்தை, மகன் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு அருண்பாண்டியன் மது  குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார். அப்போது தந்தை மகனிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்திரன் கட்டையை எடுத்து மகனை  தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில்  அருண்பாண்டியன்  அந்த இடத்திலே இறந்தார். மகன் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பாலசந்திரன் மனவேதனையில் வீட்டில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

அப்போது, அவரது வீட்டில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். வீட்டின் கதவு, ஜன்னல்கள்  பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் வராததால் சந்தேகமடைந்த அவர்கள்  கதவை உடைத்து உள்ளே சென்றபோது படுக்கையில் அருண்பாண்டியன் ரத்த  வெள்ளத்திலும், பாலசந்திரன் தூக்கிலும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,Father Kills ,New Sensation , Alcohol, son killed, father abducted, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை