வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க போதுமானளவு சிறப்பு விமானங்கள் இல்லாததால் சொந்த செலவிலாவது தாயகம் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டுமென வெளிநாடுவாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்திவரும் மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில், 26க்கும் அதிகமான தமிழர்கள் இன்னும் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வரமுடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாகவும், தங்களுக்கு இங்கு உணவு கூட கிடைப்பதில்லை என அங்கிருப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தனி விமானங்களுக்கு மட்டும் உடனடி அனுமதி வழங்கப்படுகின்றன. பின்னர், அவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசுகளே செய்து விடுகின்றனர். அதனால், தங்களது சொந்த செலவிலாவது இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டுமென வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.