×

குருகிராமில் உள்ள விலை நிலங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: டெல்லியை நெருங்கும் அபாயமுள்ளதாக தகவல்!

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள விலை நிலங்கிளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது. இதனால் அருகிலுள்ள டெல்லியையும் கூடிய விரைவில் வெட்டுக்கிளிகள்  நெருங்கும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த மாதம் ஐ நா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

அதன்படி, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்‍கிளிகள் பரவலாக ஊடுருவியுள்ளன. இவை ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்‍கு 4வது முறையாக படையெடுத்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் சோமு மாவட்டத்தில் உள்ள ஹஸ்டேடா கிராமம், ஹரியானா அருகே குருகிராமின் பல்வேறு கிராமங்கள், குருகிராம்-துவாரகா தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில், ஆயிரக்‍கணக்‍கான ஏக்கர் பயிர்களை வெட்டுக்‍கிளிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன் வெட்டுக்கிளிகள் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த ஹரியானா மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி - ஹரியானா மாநிலங்களில் மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதால் வெட்டுக்கிளிகள் தங்களது பாதையை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லிக்கு 48 மணி நேரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த வெட்டுக்கிளிகள் இனி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பாலைவனப் பகுதிகளை நோக்கி திசை திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Gurgaon ,Delhi , Gurgaon, locusts , Delhi, Haryana
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...