டெல்லி: லேசானது முதல் மிதமான நிறப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுநர் உரிமம் வழங்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் மட்டுமே வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமம் பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மோட்டார் வாகன சட்டத்தின் படிவம் 1 மற்றும் 1அ பிரிவில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த படிவங்களில் உடல் தகுதி குறித்து அளிக்கவேண்டிய விவரங்களை நிரப்பார்வை குறைபாடு உடையவர்களால் அளிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் கிடைப்பதில்லை என அரசுக்கு பல புகார்கள் வந்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு, மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தற்போது அனுமதியை வழங்கியுள்ளது. பல நாடுகளில் இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் தீவிர நிறப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழ் பற்றிய அறிவிப்பில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமையின் காரணத்தால் வண்ணப்பார்வைக் குறைபாடு உள்ள குடிமக்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாது என்ற கோரிக்கைகளை அமைச்சகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.