சென்னை: சென்னையில் முழு முடக்கத்தால் சிறிய அளவில் வணிகம் செய்யும் காய்கறி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் முழு முடக்கம் அமலில் இருப்பதனால், காவல் துறையும், மாநகராட்சியும் நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு, பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால், சிறு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், வருமானம் ஈட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வீட்டு வாடகை, தவணையில் வாங்கியுள்ள கடன்கள் உள்ளிட்டவற்றை கட்ட முடியாமல் திணறிவருவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, கோயம்பேடு மார்க்கெட் திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டதால், நாள்தோறும் முழுமையாக காய்கறிகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முழு முடக்கம் காரணமாக எம்.ஜி.ஆர் நகர், எம்.எம்.டி.ஏ மற்றும் அமஞ்சகரை, பட்டாளம் போன்ற பகுதிகளில் சிறு வணிகர்களின் காய்கறி மார்கெட்டுகளும் செயல்படவில்லை. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எங்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக உள்ள நிலையில், தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவவேண்டுமெனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.