×

கொரோனா காலத்திலும் கொள்ளையடிப்பதே கொள்கையா? தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் வெள்ளை அறிக்கை வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் நடந்ததை மக்களுக்கு முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, உச்ச நீதிமன்றம், மருத்துவர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் புறக்கணித்து, மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொல்லி, இப்போது கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிக் கைவிரிக்கும்  தமிழக ஆட்சியாளர்கள், மக்களின் உயிர்பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

சீனாவிலிருந்து ரேபிட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றை திருப்பி அளிப்பதாகச் சொல்லி சமாளித்த ஆட்சியாளர்கள், இப்போது ‘தெர்மல் ஸ்கேனர்’ வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக ஊருக்கு வெளிவர தொடங்கியுள்ளது. குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டி வைப்பதைப் போல, சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகி, உயிர்ப்பலிகளும் கூடிக்கொண்டிருக்கிற அச்சம் மிகுந்த சூழலில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நிலைமை கடுமையாக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொரு வீடாக சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் நேரில் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து பிகே58பி என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்திருப்பதை ‘தினகரன்’  நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிலுள்ள ஊழல்களை தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்த தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச (எம்.ஆர்.பி.) விலை ரூபாய் 9 ஆயிரத்து 175 ஆகும். மொத்தமாக  கொள்முதல் செய்த காரணத்தால் விலைக் குறைப்பு செய்து, ஒரு கருவியின் விலை 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவில் வாங்கியிருக்க முடியும் என மருத்துவப் பணி சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையைவிட குறைவான விலையில், 2 ஆயிரம்  ரூபாயில் தொடங்கி 5 ரூபாய் வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே  கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாக 1500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வாங்கியுள்ளனர். மொத்தமாக வாங்கும்போது இதைவிட குறைவான விலையில் வாங்க முடியும் என்றும், சீன தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன என்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என ‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ளது.

அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல்  ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரை சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையையும் இந்த  தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவைக் கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள். எத்தனை பேரிடம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது என்பதை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு களப்பணியாளர்களுக்கு இருப்பதால், இதனை எப்படிப் பதிவேற்றுவது என புரியாமல் தவிக்கிறார்கள்.

உயரதிகாரிகளோ, நீங்கள் பரிசோதிக்காவிட்டாலும் பரவாயில்லை; ஆய்வு நேரங்களில் கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பெயரளவுக்கு,  தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்யோசனையோ - தெளிவான திட்டமிடலோ - தொலைநோக்குப் பார்வையோ, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படைத்தன்மையோ இல்லாமல், அ.தி.முக. அரசு செயல்படுவதைப் பல முறை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியபிறகும், அவற்றை  திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி, எதிர்க்கட்சியினர் ‘அரசியல்’ செய்வதாக சொல்லி, முழுப் பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்கும் வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன.

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்த கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு, மக்களின் உயிரோடு மரண விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona, Loot, Thermal Scanner, Purchase, MK Stalin
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து