பீஜிங்: கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-16ம் தேதியில் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் உறுதி செய்தது. ஆனால் சீனா, வீரர்கள் பலியானதை ஒப்புக் கொண்டாலும், எண்ணிக்கையை உறுதி செய்யவில்லை. அந்நாட்டின் வெளியுறவு செய்திதொடர்பாளர் லிஜியனிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து இக்கேள்வியை கேட்ட போதிலும், அவர் வாய் திறக்கவில்லை. அதே சமயம், கல்வான் மோதலில் சீன தரப்பில் 40 வீரர்கள் பலி மற்றும் காயமடைந்ததாக தகவல் வெளியானது. முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், ‘‘இந்திய வீரர்கள் 20 பேர் இறந்திருந்திருந்தால், அவர்கள் தரப்பில் அதை விட ஒரு மடங்கு அதிகமான வீரர்கள் இறந்திருப்பார்கள்’’ என்றார்.
இந்நிலையில், வீரர் பலி விவகாரத்தில் சீனா முதல்முறையாக நேற்று தனது மவுனத்தை கலைத்தது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் அளித்த பேட்டியில், ‘‘மீடியாவில் கூறுவது போன்றோ அல்லது ஒரு சில நபர்கள் கூறுவது போன்றோ, 40 வீரர்கள் பலியானதாக வெளியான தகவல் பொய். அது பொய் செய்தி’’ என்றார். அதை தவிர்த்து வேறெந்த தகவலையும் அவர் கூறவில்லை.