சென்னை : சாலை டெண்டர் முறைகேடு மற்றும் பைபர் நெட் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் திரும்ப பெறப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலைகளை அமைப்பது தொடர்பான டெண்டரை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதாக முதல்வர் மீது வழக்கு பதிய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் இணைப்பு தொடர்பான டெண்டரிலும் முறைகேடு நடந்ததாக கூறி அதுதொடர்பாக முதல்வர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, இரு புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு புகாரில் முகாந்திரம் இல்லாததால் முடித்து வைக்கப்பட்டது என்றார். அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.