*அப்செட் ஆன குடிமகன்கள்
ஊத்துக்கோட்டை :நேற்று நள்ளிரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சென்னை, ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபானங்களை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று சென்னை, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் போன்ற பகுதிகளை சேர்ந்த குடிமகன்களும், உள்ளூர் குடிமகன்களும் சரக்குகளை வாங்க நேற்று சமூக இடைவெளியின்றியும், முண்டியடித்து சரக்குகளை வாங்கினர்.
மேலும், ஆரணி பேரூராட்சி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில், 2 கடைகளில் சரக்கு இல்லாததால் மூடப்பட்டு கிடக்கிறது. மற்றொரு, கடையில் கிடைக்கும் சரக்குகளை குடிமகன்கள் பெட்டி, பைகள் என வாங்கி எடுத்து செல்கின்றனர். இதேபோன்று, வெங்கல் கிராமத்தில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில், 2 கடைகளில் மதுபாட்டில்கள் இல்லை. இது போன்று கடைசி நாளில் டாஸ்மாக் கடைகளில் சரக்கு இல்லாததால் குடிமகன்கள் எங்கு செல்வது என தெரியாமல் திகைத்து அப்செட்டாகி நின்றனர்.