டெல்லி: லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டதையடுத்து சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து திரும்ப தொடங்கின. இந்நிலையில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகளை திரும்பிக் கொண்டிருந்தபோது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதற்காக? எப்படி? மோதல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதில், ஒருவர் அதிகாரி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகவும், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் மோதல் ஏற்பட்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து, எல்லை பிரச்சனை தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனா விளக்கம்;
இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சிக்கலை தூண்டும் வகையில் முடிவு எடுக்க வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.