நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி தரிசனத்தின் போது நெரிசலாக நிற்பதை தவிர்க்க முகப்பு மண்டபம் பகுதியில் இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோயில்களிலும் தினமும் ஆகமவிதிகளின்படி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்படுகின்றன. கோயில் வாசல் பகுதியில் நின்று இதனை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.
நெல்லையில் வரலாற்று சிறப்பு மிக்க சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தினமும் இரவு சுவாமி காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறை எழுச்சிக்கு சென்று அதிகாலை அங்கிருந்து நெல்லையப்பர் திருப்பள்ளி எழுச்சி நடைபெறுவது வழக்கம், கொரோனா தடைக்கு முன்னர் தினமும் பக்தர்கள் கோயிலின் உள்பகுதிக்கு சென்று அருகே நின்று தரிசனம் செய்துவந்தனர். 144 தடை உத்தரவிற்கு பின்னர் நெல்லையப்பர் சுவாமி சன்னதியின் முன்மண்டபம் பகுதியில் நின்று தரிசித்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் முன்மண்டப பகுதியும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
சில நாட்கள் அதிக பக்தர்கள் வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முன் மண்டப பகுதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் வெளியே சாலையில் சமூகஇடைவெளியுடன் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் கொரோனா தொற்று உலக அளவில் மக்களிடம் இருந்து விலகிச்செல்ல வேண்டிக்கொண்டனர். அவர்கள் கூறுகையில், நெல்லையப்பரை உள்ளே சென்று தரிசிக்க அரசு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி தரவேண்டும். இந்த ஆண்டு நெல்லையப்பர் தேரோட்டம் நடைபெறவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர்.
இதுபோல் அன்னதானம் பிற்பகல் காந்திமதியம்மன் சன்னதியில் முகப்பு பகுதியில் வழங்கப்படுகிறது. இன்று முதல் பக்தர்கள் ெநரிசலின்றி சமூகஇடைவெளியுடன் அன்னதானம் பெற கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.