விருதுநகர்: வத்தல் ஏற்றுமதியில்லாத நிலையில் உள்நாட்டிலும் விற்பனை மந்தமாக இருப்பதால், குண்டூர் ஏசி வத்தல் குவிண்டாலுக்கு 500 குறைந்துள்ளது. ரேஷன் மொத்த கொள்முதலால் பாமாயில் டின்னுக்கு 35 அதிகரித்துள்ளது.கொரோனா ஊரடங்கால் அனைத்து உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விற்பனையானது. ஊரடங்கு காலத்தில் வேலையின்றி வருமானம் இல்லாமல், வாங்குதிறன் குறைந்ததால் அனைத்து பொருட்களின் விற்பனையும் மந்தகதியில் உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் வரத்தால், மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட காரணங்களால் விவசாய பணிகள் நடைபெற துவங்கி உள்ளன.
ஏற்றுமதியில்லாத நிலையில் உள்நாட்டிலும் விற்பனை மந்தத்தால் குண்டூர் ஏசி வத்தல் குவிண்டாலுக்கு 500 குறைந்துள்ளது. விதைத்த 50 நாட்களில் பயறும், 90 நாட்களில் உளுந்து புதுவரத்து துவங்கி விடும். விலையும் குறையும் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் அனைத்து பருப்பு, பயறு, மளிகை பொருட்கள் கடந்த வார விலை நிலவரத்திலேயே உள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால் (அடைப்பிற்குள் கடந்த வார விலை) - 12,500 முதல் 13,000 (13,000 முதல் 13,500), குண்டூர் வத்தல் குவிண்டால் - 10,000 முதல் 11,000 (10,500 முதல் 11,500), நாடு வத்தல் - ₹6,500 முதல் 8,500 (7,000 முதல் 9,000), முண்டு வத்தல் - 8,000 முதல் 11,000 (8,500 முதல் 11,500).
ரேஷனுக்கு பாமாயில் கொள்முதலால் கடந்த வாரம் முதல் பாமாயில் விலை உயர்ந்து வருகிறது. நடப்பு வாரத்தில் டின்னுக்கு 35 அதிகரித்துள்ளது. (15 கிலோ) டின் - 1,310 (1,275) என விற்பனையானது.