சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 81 நடமாடும் மருத்துவ குழுக்களை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 173 நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடுதலாக சென்னை மாநகராட்சியில் 61 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 குழுக்கள், திருவள்ளுர் மாவட்டத்தில் 5 குழுக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குழுக்கள் என மொத்தம் 81 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை ெதாடங்கினார். இதனைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட 2000 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவப் பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: 2000 ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேருவார்கள். சென்னையில் படுக்கை வசதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 254 நடமாடும் மருத்துவ குழுக்கள் நேரடியாக களத்தில் சென்று பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.