கம்பம்: கம்பத்தில் இடியும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டி பம்பிங் அறையை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சிக்குட்பட்ட 8ம் வார்டு 2ம் தெருவில் கடந்த 2008ல் குடிநீர் தொட்டி பம்பிங் அறை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த அறை சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சேதமடைந்த நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.