விருத்தாசலம்: விருத்தாசலம் நகரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் ஜங்ஷன் சாலையில் அரசு கலை கல்லூரி எதிரே மின் மாற்றி மற்றும் மின் கம்பம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஜங்ஷன் சாலை, கல்லூரி நகர், பழமலைநாதர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள மின் கம்பம் ஒன்று பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது.
இதனால் அந்த மின் கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, விருத்தாசலம் மின்வாரிய அலுவலகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.