×

உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர் பலி: டிக்-டாக்கால் விபரீதமா?

ஓசூர்: உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர் மூச்சுத்திணறி இறந்தார். அவர் டிக்-டாக் எடுத்த போது இந்த விபரீதம் நேர்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (22). கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி, 2 வயதில் மகன் உள்ளான். நேற்று முன்தினம், வெற்றிவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயிருள்ள மீனை அவர் விழுங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, மீன் எதிர்பாராத விதமாக அவரது சுவாசக்குழாயில் சிக்கிக் கொண்டதால், மூச்சுவிட முடியாமல் திணறினார். பயந்து போன அவரது நண்பர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை தொடர்ந்து அவரது உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் சிக்கியிருந்த மீன் வெளியே எடுக்கப்பட்டது. இது குறித்து ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வெற்றிவேல் உயிருள்ள மீனை விழுங்கியது டிக்-டாக் செய்வதற்காக என தகவல் பரவியது. ஆனால் உறவினர்கள் அப்படி செய்யவில்லை என கூறுகின்றனர். பந்தயத்திற்காக இதை செய்தாரா? என விசாரித்து வருகிறோம்,’ என்றனர்.

Tags : Youngster ,disaster , Fish, youngster, tick-tok
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...