×

6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கு வட்டி விதிப்பா? : 3 நாட்களில் பதிலளிக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு!!

டெல்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பித்த ஊரடங்கால் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி விதிக்கப்படுமா? என்பது குறித்து நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனாவால் பிறப்பித்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தவணைகளை திருப்பி செலுத்த 6 மாத அவகாசத்தை ரிசர்வ வங்கி வழங்கியது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது.இதனால் வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர். ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆஜரான பாரத ஸ்டேட் வங்கி தரப்பு, தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை தவிர்க்க முடியாது என வாதிட்டது. இதற்கு தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை பற்றி பேசவில்லை; கூடுதல் வட்டி குறித்தே கவலை கொள்கிறோம் என்று பதில் நீதிபதிகள் பதில் அளித்தனர். மேலும் நீதிபதிகள், கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை. ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் கவலை அளிக்கிறது என்றனர். மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆறு மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17- ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,RBI ,Finance Ministry , Debt, installment, deferral, concession, interest, RBI, finance ministry, Supreme Court, deadline
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...