×

கொரோனா வேகமாக பரவி வருவதால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர திட்டமா? தமிழக அரசு இன்று பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வருவது உள்ளிட்ட சிறப்பு திட்டம் உள்ளதா என்பது குறித்து இன்று விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 70 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மேலும், கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதோடு, நுரையீரலை தாக்கும் வைரஸ் தாக்குதலும் அதிகரித்துள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விட்டது. நகர் முழுவதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வருகின்றன. இந்த தகவல்களால் மளிகைக்கடைகள், காய்கறி கடைகளில் மீண்டும் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் சமூக விலகல் முற்றிலும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணிடம் கொரோனா விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அப்போது, நீதிபதிகள், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், முழு ஊரடங்கு உள்ளிட்ட சிறப்பு திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா, தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு எதையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இது சம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.  இதையடுத்து, இதுகுறித்து நாளை (இன்று)  விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  ஏற்கனவே, சென்னையில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வக்கீல் தமிழரசு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

* சென்னையில் முழு ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
* கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என ஐகோர்ட் கேள்வி.
* சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வரும் தகவல்களால் மளிகைக்கடைகள், காய்கறி கடைகளில் மீண்டும் கூட்டம் கூடுகிறது.

அரிசி, மளிகை, காய்கறிகளை  வாங்கி குவிக்கும் மக்கள்:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியில் மளிகை, காய்கறிகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.   தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பேருந்து, ஆட்டோ போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரம் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கடந்த 8ம் தேதியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல தளர்வுகள் ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியதாகவே காட்சி அளிக்கிறது. தற்போது, வழிபாட்டு தலங்கள், நீச்சல் குளங்கள், மதுபான பார், ஷாப்பிங் மால், மின்சார ரயில் போக்குவரத்துக்கு மட்டுமே இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் திணறி வருகிறார்கள். இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வருகிற 15ம் தேதி (திங்கள்) முதல் 30ம் தேதி வரை 16 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் கடந்த சில நாட்களாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தி, நேற்று காட்டுத்தீ போல அதிகளவில் பரவியது.  இதனால், பயந்துபோன பொதுமக்கள் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் கூட திறக்கப்படாது என்று கருதினர். இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்தனர். இந்நிலையில் ‘சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தனியாக முழு ஊரடங்கு எதுவும் அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்தனர்.


Tags : Chennai ,Government ,Tamil Nadu , Corona, Chennai, full curfew, government, HC
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...