×

இறுதி மூச்சு வரை இடையறாது செயல்பட்டவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:  இதயத்தில் இடியும், மின்னலும் ஒரு சேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வர வேண்டும். திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றி பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டு பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது. கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களை சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார். மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து கொண்டு, அதன் காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர் விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றி கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர் தம் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்? ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு கழக பணி - தியாக உணர்வுக்கு தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்கு தெரியவில்லை. ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜெ.அன்பழகன் தியாக வாழ்வை போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது அந்த திருமுகத்தை.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : MK Stalin , Who , ceased , breathe, last
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...