சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த 5ம் தேதி அறிவித்தது. அதன்படி மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜூம், திருவொற்றியூர், மணலி, திருவிக நகர் மண்டலங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா கண்காணிப்பு குழுவில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இவர், அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து, தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவார், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.