சென்னை: சென்னையின் பழம் பெருமைகளில் ஒன்றான கொத்தவால் சாவடியில் உள்ள மொத்த மளிகை கடைகள் 10ம் தேதியிலிருந்து 14ம் தேதிவரை 5 நாட்கள் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிகநகர் ஆகிய மண்டலங்களில் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சென்னையின் பழம்பெருமை வாய்ந்த கொத்தவால்சாவடியில் இயங்கி வரும் மொத்த மளிகை பொருள் வியாபார கடைகளை மூடும்படி பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் மற்றும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாள் அனைத்து கடைகளும் மூடப்படும். நேற்றும் இன்றும் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அறிவுத்தலின் பேரில் முகக்கவசம் அணிந்தும் கிருமிநாசினி தெளித்தும் கையுறை அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் வியாபாரம் செய்து வருகிறோம்” என்றனர்.