புதுடெல்லி: பச்பன் பச்கோ அந்தோலன் என்ற குழந்தை தொழிலாளர் மீட்பு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா நோய் தொற்று பரவலையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குழந்தை கடத்தல் பிரச்னையை குறித்து ஆராயும் வகையில் நிபுணர் குழு அமைப்பது குறித்து நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. குழந்தைகள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகம் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து குழந்தைகள் கடத்தலை தடுப்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிகளை கண்டறியுமாறும் அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.