×

கட்டுப்பாடுகளை மீறும் திருமண மண்டபங்கள் வேலூர் மாவட்டத்தில் தடல்புடலாக நடக்கும் திருமணங்கள்: ஊரை கூட்டி விருந்து வைத்து உபசரிப்பு

வேலூர்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் தளர்வு செய்யப்பட்டு அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு நிலைமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் திருமணங்கள் மற்றும் இறப்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு 50 பேரும், இறப்புக்கு 30 பேரும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் திருமணங்கள் எளிய முறையில் வீடுகளில் அதிகளவில் நடந்து வருகிறது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கொரோனாவால் பலர் திருமணத்தையை தள்ளி வைத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தடல்புடலாக சில இடங்களில் திருமணங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ரயில்வே ேகட் அருகே ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. அதற்காக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து இரவு தடல்புடலாக விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை முகூர்த்தம் முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் காலை விருந்தில் சமூக இடைவெளியின்றி கலந்து கொண்டனர். திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடை மீறி தற்போது ஒருசில இடங்களில் திருமணம் தடல்புடலாக திருமணமண்டபங்களில் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்று ஊரை கூட்டி திருமணம் நடத்தினால் எளிதில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற திருமணங்களை நடத்த அனுமதி அளிக்கும் திருமண மண்டபங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியின்றி திருமணம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Wedding Vendors ,Vellore District Wedding Ceremonies ,Vellore District , Wedding Ceremonies , Vellore District
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்