சென்னை: சிமென்ட் லாரி தீப்பிடித்து டிரைவர், கிளீனர் உடல் கருகி இறந்தனர். ஆந்திர மாநிலம், கர்னூலில் இருந்து சென்னைக்கு சிமென்ட் ஏற்றிக் கொண்டு கடப்பா மாவட்டம், துவ்வூறு மண்டலம், சிந்தகுண்டா அருகே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கர்னூல்- கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இதில், லாரியின் முன்பக்கம் கேபினில் அமர்ந்திருந்த திருவள்ளூரை சேர்ந்த டிரைவர் ரசூல்பாய், கிளீனர் பாபுஜி ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து தீயில் சிக்கிய டிரைவர், கிளீனரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த துவ்வூறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.