×

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம்  ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக கொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவுக்கு சிகிச்சை மட்டும் அளிக்கப்படுதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொரோனாவை காரணம் காட்டி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பதாகவும்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் தெரிவித்தனர். இதைக் சுட்டிக் காட்டி தினகரன் நாளிதழில் நேற்று சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது. இதில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து கொண்டு இருப்பவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :கொரோனா தொற்றால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சில நிபந்தனைகளோடு மீண்டும் செயல்படுத்த  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் உடல் உறுப்பை நன்கொடை மூலம் பெறும் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இத்திட்டத்தை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனையில் செயல்படுத்தக்கூடாது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாளர்களுக்கு தனி பாதை அமைத்து செயல்பட வேண்டும்.  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.  மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் மற்ற பொது நோயாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கோவிட் நோயாளிகளுடன் ஒரே தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடாது.  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ வல்லுநர்கள், ஆலோசகர்கள், பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறுவை  அரங்கத்தில் பணியாற்றும் நபர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டும்.

இதை செயல்படுத்தும்   முழு குழுவினரையும் குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.  முழு உடல் கவசம், கிருமிநாசினிகள், கை சுத்தம் செய்யும் திரவங்கள் ஆகியவை உரிய அளவு கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நிலையான கிருமிநாசினி நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் இம்மையங்களில் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகள் ஒரு உறுதிமொழியைக் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து கொடையாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள நோயாளிகள் பின்பற்ற வேண்டிய விரிவான நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டுமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உடல் உறுப்பு மாற்று ஆணையத்தால் கண்காணிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags : Minister , Organ, ethics, Minister vijayapaskar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...