×

விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஜூன் மாத ஊரடங்கை முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஜூன் மாத ஊரடங்கையாவது விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாமல், உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட  அறிக்கை: ‘மூன்றே நாளில் கொரோனா ஒழிந்து விடும்’ என்று  உத்தரவாதம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில், “கதை கதையாக” அளந்திருக்கிறார். தினமும் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில் தானே?  உயிரிழப்புகள் குறைவு என்று முதலமைச்சர் தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்றது. 173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத்  தாக்கியிருக்கிறது என்று பொருள் 2020 ஜனவரி 7-ம் தேதியே கொரோனா பற்றி அறிந்திருந்தும், மார்ச் 7-ம் தேதியே முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டும்,  மார்ச் 24ம் தேதி வரைக்கும் மாய்மாலங்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டதால் ஏற்பட்ட விபரீதம் தான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தொட்டதும். 173 உயிர்கள் பலியானதும். ஒரு தனிமனிதரின் ஆணவம், அலட்சியம், கையாலாகாத்தனம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள்.

 “ஒன்றிணைவோம் வா” என்ற உன்னதத் திட்டத்தை அறிவித்தோம்.  மக்களிடமிருந்து வந்த கோரிக்கை மனுக்களை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால்  “ஒரு லட்சம் மனுக்கள் தரவில்லை, 98,752 மனுதான் இருந்தன என்கிறார் ‘300 கோடி ரூபாய் ஊழல் மருத்துவமனை புகழ்’ அமைச்சர் ஒருவர்.  ‘’தமிழ்நாட்டில் பசி, பட்டினியே இல்லை’’ என்று முதலமைச்சர் சொல்கிறார். இத்தனை ஆயிரம் பேர் உணவுத் தேவைக்காக ஏன் மனுக் கொடுக்கிறார்கள்? எந்த லட்சணத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்பது இதன் மூலமாக விளங்கவில்லையா? ‘’மக்களுக்கு எங்களால் எதுவும் தரமுடியாது, அதனால் தடைகளைத் தளர்த்துகிறோம்,  நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, கடமையிலிருந்து தன்னைக் கழற்றிக்  கொண்டுள்ளார் முதலமைச்சர். இது ஆபத்தானது. மேலும் அதிகமான கொரோனா பரவலுக்கே வித்திடும். “பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி” என்று தெரிந்தும், அதுபற்றி எதுவுமே முதல்வரின் அறிக்கையில் இல்லை.கடந்த 29ம் தேதி அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலி ஆலோசனையில் “9.14 லட்சம் பிசிஆர் ஆய்வு உபகரணங்கள் வரப்பெற்றதாகவும்” அதில் “1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும்” முதலமைச்சர் கூறியிருந்தார். அன்றைய கணக்குப்படி பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட பிசிஆர் ஆய்வு உபகரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 தான். மீதி கையிருப்பு இருக்க வேண்டிய உபகரணங்கள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 450 ஆகும். ஆனால் முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் ஆய்வு உபகரணங்கள்தான் கையிருப்பு என்றால் மீதியுள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணங்கள் எங்கே?இதில் கையிருப்பில் உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை தவறா?  அல்லது பரிசோதனை செய்ததாகக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா?மாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்த “மயான அமைதி”? பரிசோதனை மட்டுமல்ல; மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது.

ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்டர்கள் வெறும் 560 தான்! ஆனால் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது. “ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது” என்று கூறிய அரசுக்கு, வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதை விடுத்து, அ.தி.மு.க.,வுக்குள் குழு அரசியல் நடத்த, ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த, ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்

Tags : Corona ,MK Stalin , Corona ,regulated ,June Curfew, rather , publicity:
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...