பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் நியூகாலனி 2வது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார்(38). மரச்செக்கு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபி (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, கடந்த 17ம் தேதி வீட்டிலேயே பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்துள்ளது.தகவலறிந்த சுகாதாரத்துறையினர் நேற்றுமுன்தினம் சதீஸ்குமார் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். பேபியையும், குழந்தையையும் அரசு மருத்துவமனையில் சேர்க்க அதிகாரிகள் முயன்றனர். இது தொடர்பாக 4 மணி நேரமாக வாக்குவாதம் நடந்துள்ளது.ஆனாலும் மருத்துவமனை வரமுடியாது என பேபி பிடிவாதமாக கூறிவிட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் திடீரென தம்பதியினர் வாடகை வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவான நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில், நானும் எனது குழந்தையும் நலமாக உள்ளோம். ஆனாலும் சுகாதாரத்துறையினர் போலீசாரை வைத்து எந்த அடிப்படையில் என்னையும், என் குழந்தையையும் கைது செய்வார்கள். ஜனநாயக நாட்டில் இயற்கையாக வீட்டில் வைத்து குழந்தை பெற்றது கூட குற்றமா. என்னை அதிகாரிகள் மிரட்டியே நல்லாயிருந்த உடலையும் மோசமாக்கி விட்டதாக பேபியும், அவரது கணவர் சதீஸ்குமாரும் வீடியோவில் புலம்புகின்றனர். இது குறித்து தம்பதியினர் மீது உரிய விசாரணை நடத்தக்கோரி டிஆர்ஓ, ஆர்டிஓ ஆகியோருக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் பரிந்துரைத்ததோடு, எஸ்பி நிஷாபார்த்திபனிடமும் புகார் அளித்துள்ளார்.