நாகர்கோவில்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என தெரிகிறது. புகார் கொடுத்த பெண்களை ஒருங்கிணைத்து விசாரணை இனி நடக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (26). இவர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பழகி, இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ளார். இவரை 2-வது கட்டமாக, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 20ம் தேதி மாலையில் இருந்து 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், என்னிடம் ஏராளமான பெண்கள் பழகி உள்ளனர். யாரை நான் பட்டியலிட்டு கூறுவேன். திருமணம் செய்து கொள்வதாக கூறி யாரையும் நான் ஏமாற்றவில்லை என காசி கூறி இருக்கிறார். பின்னர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின், 12 இளம்பெண்களின் பெயர்களை கூறி உள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். காசியிடம் ஏமாந்ததாக கூறப்படும் பெண்கள் வெளி மாவட்டங்களில் உள்ளனர்.
தற்போது 5 பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில், மேலும் பல பெண்கள் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே எல்லா புகார்களையும் விசாரிக்க வசதியாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.