சென்னை: சென்னையில் பெண் துணை கமிஷனரின் மகனுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன் களப்பணியாளர்களாக உள்ள பலரையும் கொரோனா தாக்கி வருகிறது. சென்னையில் கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது. அதேபோல பல டாக்டர்கள், நர்சுகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கொரோனா தாக்கியது. இந்தநிலையில், சென்னை பெண் துணை கமிஷனர் ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்றையடுத்து அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் அதிகாரியின் மகன், ராயப்பேட்டை மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பெண் துணை கமிஷனர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.