×

கிணற்றில் தூர்வரும்போது பரிதாபம் மண் சரிந்து 2 வாலிபர்கள் பலி: இருவர் படுகாயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள பாசன கிணறு உள்ளது. தற்போது, வறட்சி காரணமாக விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், அந்த கிணற்றில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. தூர்வாரும் பணியில் களத்தூர் கிராமத்தை சேர்ந்த  விஜய் (23), எழிலரசன்(24), சரவணன் (32)  மணி (57) உள்பட 9 பேர் வேலை செய்தனர். இந்நிலையில், நேற்று காலை கிணற்றில் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருந்தது. கிணற்றுக்குள் 4 பேரும், கிரேன் ஆபரேட்டர் உள்பட 5 பேர், கிணற்றின் மேல் பகுதியிலும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கிணற்றின் உள்சுற்றுச்சுவர் மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது.

இதில், கிணற்றில் இருந்த 4 பேரும் மண்ணில் புதைந்தனர். இதை பார்த்ததும் மேலே இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மண்ணை அப்புறப்படுத்தி அவர்களை மீட்டனர். அதற்குள் விஜய், எழிலரசன் ஆகியோர் இறந்துவிட்டனர். சரவணன், மணி ஆகியோர் உயிருக்கு போராடினர்.
தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், ஒரத்தி எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி மதுராந்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பலியான எழிலரசன், எலக்ட்ரீஷியன் வேலையும், விஜய் தனியார் நிதி நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். தற்போது கொரோன பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வீட்டில் முடங்கி இருந்த அவர்கள், பிழைப்புக்காக தூர்வாரும் வேலைக்கு சென்றனர் என கூறப்படுகிறது.


Tags : men , Well, soil collapse, 2 people killed, two injured
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்