சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சென்னை சென்டல் ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஏ.சி. அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது. பொதுசேவை மையங்களிலும் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கவுண்டர்கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.