டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதன்படி, சிறப்பு ரயிலுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று காலை 10 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 1,49,025 டிக்கெட்டுகள் பதிவாகியுள்ளன என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாளை முதல் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 அல்லது 3 நாட்களில் ரயில் நிலையங்கள் டிக்கெட் விநியோகம் செய்யப்படும். ரயில் நிலையங்களில் கடைகள் செயல்படவும் அனுமித்துள்ளோம். வரும் நாட்களில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.