சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் இன்று சோதனையை தொடங்கியுள்ளது. இதற்காக, பரிசோதனைகளை மேற்கொள்ள கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சென்னையில் அதிகம் பாதித்த பகுதிகளில் மைக்ரோ திட்டத்தின் மூலம் கொரோனா தொற்று தடுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளோம். பாதிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள மக்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலும் பரிசோதனை நடத்தப்படும். வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை நடத்துவதன் மூலம் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிகிறோம் என்றார்.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழக எல்லை வருபவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. பிற நோயால் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களும் குணமடைந்துள்ளனர். பொதுமக்கள் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியம். தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. நோய் தொற்றை குறைக்க தேவையான அனைத்து நடைமுறைகளும் அமலில் உள்ளது என்றார்.