×

ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: மதுபோதையில் தந்தை, மகன் அடுத்தடுத்து வெட்டிக் கொலை

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே நள்ளிரவில் மதுபோதையில் தந்தை, மகன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். வெட்டப்பட்ட மற்றொரு வாலிபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை அருகே தெற்கு பொம்மையாபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவரது மகன் காளிச்சாமி (40). கூலி தொழிலாளி. அதே கிராமம் நடுத்தெருவை சேர்ந்த காளிபாண்டி மகன் பாலமுருகன் (22). கோவில்பட்டி தீப்ெபட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். உறவினர்களான காளிச்சாமியும், பாலமுருகனும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலமுருகன், காளிச்சாமியை அரிவாளால் வெட்டினார். உடனே அவர் செல்போன் மூலம் இதுபற்றி தம்பி மகாராஜனிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பைக்கில் வந்த  மகாராஜன் (27) படுகாயமடைந்த காளிச்சாமியை பைக்கில் ஏற்றிக் கொண்டு பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார்.  தகவல் அறிந்த கருப்பசாமி உடனே பாலமுருகனின் வீட்டிற்கு சென்று இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பாலமுருகன், கருப்பசாமியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றார்.  

 வீடு திரும்பிக் கொண்டிருந்த மகாராஜன், தனது தந்தை தெருவில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆத்திரமடைந்த அவர், பாலமுருகனை  தட்டிக் கேட்ட போது அவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மகாராஜனும் துடிதுடித்து இறந்தார். இப்படி தந்தையும், மகனும் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.



Tags : Ottapadaram ,Terror , addy, alcoholic, father, son, cut and killed
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...