டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 300 ரயில்கள் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்கள், பேருந்துகள் ஓடாத நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணம் மேற்கொண்டு தங்களது ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 300 ரயில்கள் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாநில அரசுகள் ஒத்துழைத்தால் ரயில்களை இயக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாக செல்வதை தவிர்க்கும்படியும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அணுகி ரயில்கள் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ளும்படியும் அமைச்சர் அறிவுறுத்தினார்.