திருமங்கலம்: பராமரிப்பு பணிக்காக நேற்று காலை முதல் மாலை வரை திருமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மதுரை திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே கற்பகம் நகர் செல்லும் ரோட்டில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. தற்போது பயணிகள் ரயில்கள் ஓடாத நிலையில் சரக்குரயில்கள் மட்டும் செல்தால் தினசரி ஓரிரண்டு முறை மட்டுமே கேட் மூடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கற்பகம் நகர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையில் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கு முறையான அறிவுப்புகள் எதுவும் செய்யாமல் மூடப்பட்டதால் ரயில்வே கேட்டினை தாண்டியுள்ள கற்பகம்நகர், காமராஜபுரம், சோணைமீனாநகர், ஆறுமுகம் வடக்குதெரு மற்றும் சுங்குராம்பட்டி, விடத்தகுளம் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட திருமங்கலம் நகரில் கடந்த சில தினங்களாகதான் கடைகள், வணிகநிறுவனங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் பகல் முழுவதும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் கற்பகம்நகர், காமராஜர்புரம் பகுதிமக்கள் பாண்டியன் நகர் வழியாக சுமார் இரண்டு கி.மீ தூரம் சுற்றி நகருக்குள் வந்து செல்லவேண்டிய நிலை இருந்ததால் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த வாரம் வரையில் திருமங்கலத்தில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தபோது இதுபோன்ற தண்டவாள பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒருநாள் காலைமுதல் மாலை வரையில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அத்தியாவசிய பணிக்காக கூட வெளியே செல்ல சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது’’ என்றனர்.