சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, 5வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். குறிப்பாக, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருடனான ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர், இந்தியாவிலேயே அதிகமாக பரிசோதனை நடந்தது தமிழகத்தில் தான் என்றார். கொரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு மாஸ்க் அளிக்க வேண்டும்; அனைவரும் மாஸ்க்குடன் பணியாற்ற வேண்டும் என்றார். தமிழகத்தில் ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. பொது ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும். ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்தார்.