புதுடெல்லி,: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு இந்த ஆண்டில் 25,000 கோடி இழப்பு ஏற்படும் என, கிரிசில் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் எந்தெந்த துறைகள் எவ்வளவு பாதிப்பை அடைந்துள்ளன என கணிப்புகள் மற்றும் ஆய்வறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இந்த வகையில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில், நடப்பு நிதியாண்டில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கு 16 சதவீத வருவாய் இழப்பு ஏற்படும். அதாவது, வருவாய் 25,000 கோடி குறைந்து, 1.3 லட்சம் கோடியாக இருக்கும். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த இழப்பை தவிர்க்க முடியாது. மொத்த வருவாயில் விளம்பரங்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு 45 சதவீத வருவாய் கிடைக்கிறது. சந்தா மூலம் 55 சதவீத வருவாய் கிடைக்கிறது. இதில் விளம்பர வருவாய் 18 சதவீதமும், சந்தா வருவாய் 14 சதவீமும் குறைய வாய்ப்புள்ளன என ஆய்வறிக்கையில் கிரிசில் குறிப்பிட்டுள்ளது.