மாலே: இந்திய கப்பற்படை கப்பலான கேசரி மாலத்திவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேவையான உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு மாலே துறைமுகத்துக்கு சென்றடைந்தது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி வருவது போல மிஷன் சாகர் திட்டத்தின் கீழ் நட்பு நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்களையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து 580 டன் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கேசரி கடற்படை கப்பல் மாலே துறைமுகத்துக்கு சென்றடைந்தது. இதற்கிடையே ஊரடங்கால் மாலத்தீவில் சிக்கிய 202 இந்தியர்கள் ஐஎன்எஸ் மாகர் கப்பல் மூலம் இன்று மாலை கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே மாலத்தீவில் இருந்து 2 கட்டங்களாக 698 இந்தியர்கள் கடற்படை கப்பல்கள் மூலம் நாடு திரும்பினர்.