சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42.53 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,27,029ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,250ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,206 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,917 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 13,85,834 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81,795ஆகவும் உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதில் அதிகபட்சமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தம் அங்கு 5000 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. நெருக்கடியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் ஆவார்கள். மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.